இந்திய பெருங்கடல் பகுதியில் குவிக்கப்பட்டு வரும் சீன போர்க்கப்பல்களின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தீவிரமாக கண்காணித்து வருவதாக, கடற்படை தளபதி ராபின் தோவன் கூறினார்.
காஷ்மீரின் லடாக் பகுதியில் இருந்து 300 கி.மீ.க்கு அப்பால், இமாச்சல பிரதேச எல்லையில் அமைந்துள்ள சுமர் பகுதியில், சீன ராணுவம் கடந்த 10–ந் தேதி அத்துமீறி நுழைந்தது. அங்கு தொடர்ந்து குவிக்கப்பட்டு வரும் ஏராளமான வீரர்களுக்கு, சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தினமும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு சீன வீரர்களுக்கு இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 2 முறை கொடி கூட்டம் நடந்தது. ஆயினும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சீன வீரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் சீன ராணுவத்தின் வேண்டுகோளின் பேரில், நேற்று மீண்டும் இரு நாட்டு அதிகாரிகளிடையே கொடி கூட்டம் நடத்தப்பட்டது. இந்திய எல்லைப்பகுதியான சுஷல் பகுதியில் இருந்து ஒரு கி.மீ.க்கு அப்பால் உள்ள சீன பகுதியான ஸ்பங்குர்கப் பகுதியில் இந்த கூட்டம் நடந்தது.
இவ்வாறு தரைவழி எல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்து வரும் சீனா, சமீபகாலமாக கடல் பகுதியிலும் தனது படைகளை குவிக்க தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய பெருங்கடல் பகுதியில் ஏராளமான சீன போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதை உறுதிப்படுத்தியுள்ள இந்திய ராணுவ தளபதி ராபின் தோவன், சீனாவின் எவ்வித சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த கடற்படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
இந்திய பெருங்கடல் மண்டலம், நமது படைகளின் நடவடிக்கைக்கு உரிய பகுதியாகும். ஆனால் இந்த மண்டலத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அவற்றின் நடவடிக்கைகளை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
அந்த கப்பல்களால் எவ்வாறு எங்களுக்கு சவால்களை அளிக்க முடியும்? அவற்றின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? என்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.
இருப்பினும் நம்முடைய விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எப்போதும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சீன கடற்படையின் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள, எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு கடற்படை தளபதி ராபின் தோவன் தெரிவித்தார்.
Post a Comment