10 அணிகள் இடையிலான 6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.
இதில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் (இந்தியா), பெர்த் ஸ்கார்ச்சர்சும் (ஆஸ்திரேலியா) சந்தித்தன. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆடம் வோக்ஸ் 71 ரன்களும் (52 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), கிரேக் சிமோன்ஸ் 39 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரின் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் (2 ரன்), காலிஸ் (6 ரன்), உத்தப்பா (23 ரன்) ஆகிய முன்னணி வீரர்கள் சொதப்பினாலும், மிடில் வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ், கைகொடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய அவர் கொல்கத்தா அணியை 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு இலக்கை எட்ட வைத்தார். சூர்யகுமார் யாதவ் 43 ரன்களுடன் (19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் நின்றார்.
3-வது வெற்றியை புசித்த கொல்கத்தா அணி இதன் மூலம் முதல் அணியாக அரைஇறுதியையும் எட்டியது. மொத்தத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் கொல்கத்தா தொடர்ச்சியாக பதிவு செய்த 12-வது வெற்றி இதுவாகும்.
இன்றிரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும் (இந்தியா), லாகூர் லயன்சும் (பாகிஸ்தான்) மோதுகின்றன.
Post a Comment