பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் வழி பேத்தி சம்யுக்தாவுக்கும், மகள் வழி பேரன் டாக்டர் பிரதீவனுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 30–ந் தேதி திருமணம் நடக்கிறது.
இந்த திருமண விழாவுக்கு வரும்படி பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அழைத்தார். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை ராமதாஸ் நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
திருமண சாக்கில் நடைபெறும் இந்த சந்திப்புகள் மூலம் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விலகி தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுபற்றி மாநில பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது கூறியதாவது:–
இந்த மாதிரியான சந்திப்புகளை வைத்து கூட்டணிகள் மாறும் என்று சொல்லிவிட முடியாது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்துதான் தேர்தலை சந்தித்தோம். அரசியல் நாகரீகம் கருதி தனது பேரப் பிள்ளைகள் திருமணத்துக்கு அவர் நேரடியாக சென்று அழைப்பு கொடுத்து இருப்பார். மற்றபடி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும், அணுகி வரும் விதமும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் தெரியும்.
உள்ளாட்சி இடைத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடாவிட்டாலும் களத்தில் நின்ற எங்களுக்கு ஆதரவளித்தார்கள். எனவே கூட்டணி மாறும் என்று கனவு கண்டால் நிச்சயம் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment