288 இடங்களை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 15–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகளிடையே நேரடி போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த பேச்சு வார்த்தைகளில் சுமூகமான தீர்வு எட்டப்படாததால் இரு கூட்டணிகளும் உடைந்து விட்டன.
இதனையடுத்து, பிரிதிவிராஜ் சவுகான் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது.
தேசியவாத காங்கிரஸ் தரப்பில் துணை முதல் மந்திரி பதவி வகித்துவந்த அஜித் பவார் அந்த பதவியை ராஜினாமா செய்தார். நேற்றிரவு மாநில கவர்னரை சந்தித்த அஜித் பவார், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் சமர்ப்பித்தார்.
மராட்டிய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் விலக்கிக்
கொண்டதால் அம்மாநில சட்டசபையில் ஆளும்கட்சியான காங்கிரசுக்கு உள்ள பெரும்பான்மை சரிந்து விட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகல் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகரை சந்தித்த அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஏக்நாத் கட்சே, கவர்னரிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
மாநில சட்டசபையில் ஆளும்கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதால், பிரிதிவிராஜ் சவான் தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment